கையடைப் படலம்

கையடைப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கையடைப் படலம் 

(தரசதன் தனது மைந்தர்களான இராமன். இலக்குவன் இருவரையும் விசுவாமித்திர முனி வசம் அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதியிது ‘கையடை’என்பதற்கு அடைக்கலம் என்பது பொருள். தயரதனிடம் விசுவாமித்திரன் வருதல் – மன்னன் முனிவனை வணங்கி வரவேற்றல். மன்னனை முனிவன் புகழ்ந்து பேசுதல். வேள்வியைக் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டல் - தயரதன் துயர் – தானே வேள்வி காக்க வருகிறேன் எனல் – முனிவன் சினம் கொள்ளலும் அதன் விளைவுகளும் –வஷிஸ்டன் உரையால் – தயரதன் தெளிவு அடைதல் - இராம - இலக்குவர்களை

முனிவனிடம் ஒப்படைத்தல் – சினம் நீங்கிய முனிவன் அரசிளங் குமரர்களைத் தன்னுடன் அழைத்தேகல் ஆகிய - செய்திகள் இப்பகுதியில் கூறப்படும்.)

ஒரு நாள் அயோத்தியில் அழகிய மலர் இதழ்களின் ஈரம் காய்ந்தது அந்த அழகான சூரிய உதயத்தால். அச்சமயத்தில், தசரத சக்கரவர்த்தி அழகிய மண்டபம் ஒன்றில், இந்திரன் கொலு வீற்று இருப்பது போன்று, தனக்கே உரிய கம்பீரமான அந்த அழகுடன் சிங்காசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது பெருங் கோப குணத்தைக் கொண்ட கௌசிக முனிவர் அம்மண்டபத்திற்குள் வந்தார். இவரை விசுவாமித்திரர் என்றும் கூறுவார்கள் (விசுவா என்றால் உலகம் ; மித்திரர் என்றால் நண்பர்.அதாவது, இவரது இந்தப் பெயருக்கு இவ்வுலகத்தின் நண்பர் என்றும் ஒரு பொருள் உண்டு. இவருக்கு அவ்வாறு பெயர் சூட்டியது யமன் எனப்படும் கால தேவன் ஆவார்).

கௌசிக முனிவரைக் கண்ட தசரதர் ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தாலும்,அவரது கோபமான முகத்தைப் பார்த்து கொஞ்சம் பர பரப்பும் அடைந்தார்.அம்முனிவரைப் பார்த்த மாத்திரத்தில் தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்தார். அவர் அருகில் பணிவுடன் சென்றார்.அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். பிற்பாடு வரவேற்று இரத்தினங்கள் பதித்த பசும் பொன் ஆசனத்தில் அம்முனிவரை அமரச் செய்தார்.பின்னர் தசரதர் அம்முனிவரிடம் "பிரம்மரிஷி பட்டம் பெற்ற முனிவரே! தாங்கள் இந்நகருக்கு வந்திருப்பது இந்த பூமி செய்த தவத்தாலோ? இல்லை, நான் செய்த தவத்தாலோ? இரண்டுமே இல்லை! எனது முன்னோர் செய்த தவப் பயன் தான்!" என்று உபசார வார்த்தைகளை பேசி மகிழ்ந்தார்.

உடனே கௌசிகர்,"பகைவரைப் போரில் வென்றவனே! வேல் ஆயுதங்களை உடையவனே! தேவர்களுக்கும் என்னைப் போன்ற ரிஷிசிரேஷ்டர்களுக்கும் துன்பம் ஏற்பட்டால் புகலிடமாவது உனது நகரமல்லவா? அயோத்தியே அமரவாதிப் பட்டணம் ஆகும்; சுவர்க்கலோகமாகும்; இப்போது இராமனின் பிறப்பிற்குப் பிறகு இந்நகரம் திருப்பாற்க்கடலுக்கு ஒப்பாகும்! சக்கரவர்த்தியே! முன்பு ஒரு காலத்தில் இந்திரன் அரக்கர்களிடம் தோல்வி அடைந்து உன்னிடம் வந்து முறையிட்டான். அப்போது நீ அந்த அரக்கர்களின் தலைவனான சம்பரனை அழித்து, திரும்பவும் தேவேந்திரனுக்கே அந்த இந்திர லோகத்தை மீட்டுக் கொடுத்தாய். இன்று இந்திரன் நீ அவனுக்கு மீட்டுக் கொடுத்த அரசை அல்லவா ஆண்டு கொண்டு இருக்கிறான்!" என்று பலவாறு தசரதனை புகழ்ந்து உரைத்தார்.

முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தசரத சக்கரவர்த்தி அக மகிழ்ந்தார். கைகளை குவித்து வணங்கியபடி அம்முனிவரின் முகத்தைப் பார்த்து," தேவரீர், தாங்கள் வந்ததால் நான் பெரும் பயனைப் பெற்றேன். நான் தங்களுக்குச் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டோ? அப்படி இருந்தால் சொல்லுங்கள், தாங்கள் காலால் இட்டப் பணியை, நான் எனது தலையால் முடிக்கிறேன்" என்றார்.

"யாம் காட்டிலே ஒரு பெரும் யாகத்தை நடத்த சித்தம் கொண்டு இருக்கிறோம். அந்த யாகத்திற்க்குக் கொடிய அரக்கரால் தீங்கு நேராமல் காப்பதற்காக, உன்னுடைய புதல்வன் இராமனை என்னுடன் அனுப்பி வைப்பாயாக!"என்று தான் வந்த காரணத்தை எடுத்துச் சொன்னார் கௌசிக முனிவர். அம்முனிவரின் அந்த வார்த்தைகள், தசரதனுக்கு மார்பில் பட்ட காயத்தை வேல் கொண்டு குத்துவது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சொல்ல முடியாத துன்பத்தை தசரதன் அக்கணம் அனுபவித்தான்.

உடனே மறுமொழியாக அம்முனிவர் பெருமானிடம் தசரத மகா சக்கரவர்த்தி "ரிஷிகளுள் ராஜ ரிஷியே, இராமன் இளம்பிராய முடையவன். ஆயுதத்தேர்ச்சியும் அந்த அளவுக்கு இல்லாதவன். ஆதலால் அவன் வேண்டாம். அரக்கர்களால் தங்கள் யாகத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் நான் காத்துத் தருகிறேன். மும்மூர்த்திகள் கூட உங்கள் யாகத்திற்க்குத் தடை ஏற்படுத்தாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து உடனே யாகத்தை செய்வதற்கு எழுந்தருள்க!" என்று கூறினார்.

தம் வார்த்தைகளை மறுத்து தசரதர் பேசியதால் விசுவாமித்திரர் பெருங் கோபங்கொண்டு ஆசனத்தை விட்டு எழுந்தார். அவரது கோபத்தைக் கண்ட தேவர்கள் " இம்முனிவரால் உலகத்துக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ" என்று கவலை அடைந்தார்கள். சூரியன் மறைந்தான்; உலகங்கள் நிலை பெயர்ந்து சுழன்றன;அப்பொழுது அப் பெரும் முனிவர் தனது புருவத்தை நெறித்துப் பெருஞ் சிரிப்பு சிரித்துக் கண் சிவந்தார். அதனால் திசைகள் எல்லாம் இருண்டன.

விசுவாமித்திரரின் மகிமைகள் எல்லாம் முன்பே அறிந்தவர் வசிஷ்டர் பெருமான். ஆதலால், "அம்முனிவரின் கோபம் சக்கரவர்த்திக்கும், அவரது திருமகனுக்கும் என்ன தீங்கு ஏற்படுத்தி விடுமோ?" என்று சந்தேகித்த வசிஷ்டர் விசுவாமித்திரரிடம் சமாதானம் கூறினார். பின்பு சக்கரவர்த்தியிடம்," இம்முனிவர் பெருமான் இராமனைத் தரும்படிக் கேட்பதெல்லாம் இராமனுடைய நன்மைக்காகத் தான். இந்த முனிவர் பெருமானால் உனது குமாரனுக்கு வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் நன்மைகளை நீயே தடுக்காதே! எனது ஆலோசனை யாதெனில் உடனே உனது குமாரனை இவருடன் அனுப்பி வைப்பாயாக!" என்று கூறி முடித்தார்.

குல குரு வசிஷ்டர் பெருமானே இவ்வாறு கூறிய பின்னர், தசரதனுக்கு இனி மறுத்துப் பேச என்ன இருக்கிறது. இராமனை அழைத்து வரும் படி ஏவலர்களிடம் பணித்தார் தசரதர், அதன்படி இராமபிரானும் அழைத்து வரப்பட்டார். இராமபிரானை பின் தொடர்ந்து நிழல் போல லக்ஷ்மணனும் அவைக்கு வந்து சேர்ந்தான்.

தவ யோகியும், ராஜ ரிஷியுமான விசுவாமித்திரரிடம் இராம, லக்ஷ்மணனை சுட்டிக் காட்டியபடி "தவக் கொழுந்தே! இந்த இளங் குமாரர்களுக்கு இனி தந்தையும் தாங்கள் தான், தாயும் தாங்கள் தான், இவர்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன். இவர்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்து அருள்வீராக!" என்று அவரிடம் தனது குமாரர்களை ஒப்புவித்தார் தசரத சக்கரவர்த்தி.

கௌசிக முனிவர், தசரத குமாரர்களை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். அவரது மனதில் முன்பு தோன்றிய பெரும் சினம் தணிந்து, தசரதரை வாழ்த்தினார். பிறகு தசரத மைந்தர்களைப் பார்த்து," புறப்படுவோம் குமாரர்களே, கடமை நம்மை அழைக்கிறது. உடனே சென்று யாகத்தை செய்து முடிப்போமாக !" என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

இராமபிரான் இடையில் உடை வாளைக் கட்டிக் கொண்டார். இடக்கையில் ஒரு வில், தோள்களில் அம்புறாத் தூணி, அது நிறைய அம்புகள் என விசுவாமித்திரரை பின் தொடர்ந்தார். அண்ணன் காட்டியே அதே வழியில் லக்ஷ்மணனும் தனது வில், அம்பு உட்பட அனைத்து ஆயுதங்களுடன் அண்ணனைப் பின்தொடர்ந்து சென்றான். மூவரும் அயோத்தியின் எல்லையைக் கடந்து ஒன்றரை யோசனை தூரம் வழி நடந்து சரயூ ஆற்றின் தென் கிழக்கே வந்து சேர்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதால், அம்மூவரும் ஆற்றங்கரையில் இயற்கையாக காணப்பட்ட சோலையில் தங்கினார்கள். மீண்டும் அடுத்த நாள் காலையில் சூரியன் உதயமானதும் தங்களது பிரயாணத்தைத் தொடர்ந்தனர். இப்போது அந்த ஆற்றுக்கு வடகரைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இராமர், விசுவாமித்திர முனிவரைப் பார்த்து," நாம் தங்கி இருந்த சோலையைப் பற்றிச் சொல்லியருளுதல் வேண்டும்!" என்று வேண்டி நின்றார்.

 கையடைப் படலம்

மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன்

அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 

நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 

தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின் வருகை

தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
நாயகன் இவன்கொல்? என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 

மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 

தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து மொழிதல்

வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 

பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி,
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, இன்றே
துணிந்தது, என் வினைத் தொடர் எனத் தொழுது சொல்லும்: 

நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான் வலம்
செய்து வணங்க, எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற, முனி கூறும்: 

தயரதனை விசுவாமித்திரன் புகழ்தல்

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால், பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்! 

இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து, நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி, குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச! என்றான். 

தயரதன் கை கூப்பித் தொழுது, யான் செய்வது அருளுக! என வேண்டுதல்

உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும் கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி, அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக! என்று, முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 

வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம், "செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.

தயரதன் துயர் உறுதல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும், உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட, கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.

தயரதன் தானே வந்து வேள்வி காப்பேன் எனல்

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி, படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக! என்றான்.

விசுவாமித்திர முனிவனின் கோபம்

என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; இறுதிக் காலம் அன்று என, ஆம் என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும் நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.

வசிட்டன் உரையால் தயரதன் தெளிதல்

கறுத்த மா முனி கருத்தை உன்னி, நீ
பொறுத்தி என்று அவற் புகன்று, நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? எனா, வசிட்டன் கூறுவான்: 

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே,

தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல்

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று என,-
வருக என்றனன் என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, நல் தந்தை
நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க! என்றான். 

இராம இலக்குவருடன் முனிவன் புறப்படுதல்

கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா,
நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான்.

ஆயுதம் தாங்கி இராம இலக்குவர் முனிவன் பின் செல்லுதல்

வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 

அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்.

மூவரும் சரயு நதியை அடுத்த சோலையைச் சேர்தல்

வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்,
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்.

கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்,
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 

தீய்ந்த சோலையைக் கண்டு இராமன் வினாவுதல்

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா
ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார்

தேவு மாதவன் - தொழுது, தேவர்தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு,
யாவது ஈது? என்றான் - எவர்க்கும் மேல்நின்றான்.

அப்பெருந் திருவொடும் அகில நாதன் என்று,
எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே,
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே,
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 

அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில்,
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.

"இனைய சோலை மற்று யாவது?" என்று, மா
முனிவ! கூறு என முதல்வன் கூறலும்,
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்,
தனு வலாய்! இதன் தன்மை கேள் எனா, 

சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்,
வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது,
அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 

அவனி வந்து, மன்னவர் இடம்தொறும்,
தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து,
"இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு" எனா,
உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா, 

இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன்,
"சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன்
முந்து வந்து மா முரல நின்றவால். 

நின்ற சோலைவாய், நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன்
நன்றியால் இருந்து, அரசை நண்ணியே,
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.

உருவம் மாறி, வேறு உருவமாகியே,
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்,
பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்" எனத்
தருவின் நாயகந்தான் விளம்பினான்: 

"சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு
அவன் விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்." 

என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று, மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று, வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான். 

அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம், இச் சோலை என்றலும்,
மன்னர்மன்னவன் மதலை, நன்று எனா,
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.