அகலிகைப் படலம்

அகலிகைப் படலம்

bookmark

பாலகாண்டம்

பாலகாண்டம் என்பது இராமபிரானின் இளம்பிராய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி. பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிக்கும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டுள்ளது.

அகலிகைப் படலம்

(கௌதம முனிவனின் மனைவியும், சனகனின் புரோகிதனான சதானந்த முனிவனுடைய தாயுமான அகலிகை, இந்திரனால் ஏமாற்றப்பட்டு அவனோடு கூடி, பின்னர்க் கௌதம முனிவனது சாபத்தால் கல்லுருவம் அடைகிறாள். இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது, இராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி, முன்னைய பெண் வடிவத்தை அடைந்த வரலாற்றைக் கூறுவது இப் படலம். விசுவாமித்திரன் முதலான மூவரும் சோணை நதியை அடைந்து சோலையில் தங்குகின்றார்கள்; பின்பு கங்கையைக் கண்டு மிதிலை நாடு சேர்கின்றார்கள். அப்பொழுது அதன் மதிற்புறத்தே கல்லாய்க் கிடந்த அகலிகைக்குப் பெண்ணுருவம் தருகின்றான் இராமன். வியப்புற்ற இராமன் கேட்டதற்கிணங்க விசுவாமித்திரன் அகலிகை வரலாறு கூறுகின்றான். பின்னர் மூவரும் அகலிகையைக் கௌதம முனிவனிடம் சேர்ப்பித்து மிதிலையின் புறமதிலை அடைகின்றார்கள்.)

அடர்ந்த கானகத்தின் வழியாகச் சென்ற விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர் ஆகிய மூவரும், சோணை என்னும் நதியை அடைந்தார்கள். அவர்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. இரவுப் பொழுதைக் கழிக்க அம்மூவரும் அருகில் இருந்த ஒரு சோலைக்குச் சென்று தங்கினார்கள். இராமபிரான் அந்த சோலையின் அழகைக் கண்டு வியந்தபடி விசுவாமித்திரரிடம், "இந்தச் சோலையைப் பற்றித் தாங்கள் கூற வேண்டும்?" என்று கேட்டார்.

விசுவாமித்திரரும் இராமனின் விருப்பப்படி அந்த சோலையைப் பற்றிக் கூறத் தொடங்கினார், "சேனாதிபதி வேண்டுமென்று வேண்டிய தேவர்களின் வேண்டுதலால், வாயுதேவனைச் சகாயமாகக் கொண்ட அக்கினி தேவன் சிவபெருமானின் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட வீரியத்தைத் தாங்கிக் கங்கையில் விட்டான். கங்கை அதனைத் தாங்க மாட்டாமல் கைலாயத்தின் அருகேயுள்ள இந்த நானற்காட்டில் விட்டாள். அந்த வீரியத்தில் இருந்து சுப்பிரம்மணியக் கடவுள் அங்குத் தோன்றிக் கார்த்திகைப் பெண்கள் பால் கொடுக்க ஆறுமுகங் கொண்டு வளர்ந்தார். அக்கடவுள் வளர்ந்த இடமே இதுவாகும்!" என்று அந்த சோலையைப் பற்றிக் கூறி முடித்தார் கௌசிகர். பின்னர் அம்மூவரும் அந்த அழகிய சோலையில் இரவுப் பொழுதைக் கழித்தனர்.

சூரியன் உதயமானவுடன் அம்மூவரும் அங்கிருந்து புறப்பட்டு, அழகிய கங்கை ஆற்றை வந்து சேர்ந்தார்கள். கங்கையைக் கண்டு வியந்தபடி நின்று கொண்டிருந்தார் இராமபிரான். அப்போது விசுவாமித்திரர் ராமனிடம், "இந்தப் பரந்த நதி உனது குலத்தவர்களால் தான் இந்த பூமிக்குக் கிடைத்தது" என்று கூற. இராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரிடம் ஆவலுடன் அந்த கங்கை நதியின் வரலாற்றைக் கூற வேண்டினர். விசுவாமித்திரரும் கங்கையின் அக்கதையை கூறத் தொடங்கினார், "ராமா கவனமாகக் கேள், முன்னொரு காலத்தில் சூரிய குலத்தில் பிறந்த சகரன் என்பவன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவன் இந்த பூமி முழுவதையும் ஒருவனாய் அரசாண்டவன். அந்த சகர மகாராஜனுக்கு இரண்டு மனைவியர்கள். விதர்ப்ப தேசத்து அரசனுடைய மகளாகிய கேசினி என்பவள் அவனுடைய முதல் மனைவி. காசியப முனிவருக்கு வினதையிடம் தோன்றியவளும், கருடனின் உடன் பிறந்தவளுமான சுமதி அவனுடைய இரண்டாவது மனைவி.

சகரச் சக்கரவர்த்தி தன் மனைவியருடன் இமயமலையின் அருகில் இருக்கும் பிருகுப்ரஸ்ரவணம் என்னும் மலைக்குச் சென்று தவம் புரிந்தான். பிருகு முனிவர் அவனது தவத்தினால் மகிழ்ந்து அங்கே தோன்றினார். அவனை நோக்கி, "சகர மன்னா! உனது மனைவி இருவரில் ஒருத்தி வம்சவிருத்திக்குரிய புத்திரன் ஒருவனைப் பெறுவாள். மற்றொருத்தி மகா பலசாலிகளான அறுபதினாயிரம் மக்களைப் பெறுவாள்" என்று கூறி, அங்கிருந்து மறைந்தார்.

இதனைக் கேட்டு மகிழ்ந்தான் சகரன். நாட்கள் நகர்ந்தன, பிருகு முனிவர் அருளியபடியே கேசனி ஒரு புத்திரனைப் பெற்றாள். அம்மைந்தனுக்கு அஸமஞ்சன் என்று பெயரிட்டனர். இளையவள் சுமதி சுரைக்காயைப் போல ஒரு கர்ப்பப்பிண்டத்தைப் பெற, அது வெடித்து அறுபதினாயிரம் குமாரர்கள் தோன்றினார்கள். அஸமஞ்சன் ஊரில் உள்ளவரின் குழந்தைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு போய்ச் சரயுநதி நீரில் தள்ளி, அவை துடித்து இறப்பதைக் கண்டு சிரித்து விளையாடும் கொடுந் தொழில் உடையவனாக விளங்கினான். அதனால் அவனை, அவனுடைய தந்தையான சகரன் காட்டுக்குத் துரத்தி விட்டார். மூத்தாள் மக்கள் போல இளையாள் மக்கள் பாவிகள் அல்லர்.

அக்காலத்தில் பூலோகத்தில் யாரேனும் நூறு அசுவமேக யாகம் நடத்தினால், அவர்களுக்கு இந்திரப் பதவி கிடைத்து விடும். அப்போது இருக்கிற தேவேந்திரன் அந்த நூறு அசுவமேக யாகத்தைச் செய்த அந்த நபருக்குத் தனது பதவியை விட்டுத் தந்தே ஆக வேண்டும். இதன் காரணமாக, அக்காலத்தில் பூலோகத்தில் யார் அசுவமேக யாகம் நடத்தினாலும் இந்திரன் அது நிறைவேறாதபடி தன்னால் ஆன அனைத்துக் கெடுதல்களும் செய்வது வழக்கம்.

சகரன் அப்போது அசுவமேக யாகம் செய்யத் திட்டமிட்டான். பெரும் முனிவர்களைக் கொண்டு அவனது அசுவமேக யாகம் தொடங்கப்பட்டது. இந்திரனைப் பற்றி சகரனுக்குத் தெரியும், அதனால் அசுவமேக யாகத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் குதிரையை, அஸமஞ்சனின் மகனான அம்சுமானைக் கொண்டு பாதுகாக்கச் செய்தான். அம்சுமானும் குதிரையைக் கண் இமைக்காமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டு வந்தான், இருந்தாலும் இந்திர தேவன் அக்குதிரையை இரவோடு, இரவாக தனது மாயையினால் கவர்ந்து சென்று பாதாள உலகத்தில் கடும் தவம் புரிந்து வந்த கபிலரின் ஆசிரமத்தில், அம்முனிவருக்கே தெரியாமல் அவர் அருகில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டு விட்டுச் சென்று விட்டான். அசுவமேக யாகம் நிறைவடையும் சமயத்தில் அக்குதிரை காணாமல் போன செய்தியைத் தனது பாட்டனாரான சகரனுக்குத் தெரிவித்தான் அம்சுமான். சகரன் உடனே தனது மைந்தர்கள் அறுபதினாயிரவர்க்கும், குதிரை காணாமல் போன செய்தியைக் கூறி அதனை தேடிக் கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

இதனைக் கேள்விப்பட்ட சகரனின் அந்த பலசாலியான மகன்கள் அறுபதினாயிரவர்க்கும் கடும் கோபம் வந்தது. அவர்கள் பூமி முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் அக்குதிரயைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு வின்னுலகத்திலும் தேடினார்கள், அங்கும் அந்தக் குதிரை இல்லை. பாதாளலோகத்திலும் அக்குதிரையைத் தேட சித்தம் கொண்டு, பாதாளலோகம் சென்றார்கள். அப்போது கபிலரின் ஆசிரமத்தை அடைந்த அவர்களது கண்களில் (இந்திரன் அபகரித்துச் சென்ற) அந்த யாகக் குதிரை தென்பட்டது. விஷயம் அறியாமல், தீர விசாரிக்காமல் கபிலர் தான் குதிரையைத் திருடிக்கொண்டு வந்தார், என்று அவர் மீது குற்றம் சுமத்தி அவரைப் பல அவதூறு வார்த்தைகளைக் கொண்டு கண்டபடி பேசினார்கள். அத்துடன் அவரது தவத்திற்கும் இடையூறாகத் திகழ்ந்ததால், கோபம் கொண்ட முனிவர் அவர்கள் அறுபதினாயிரம் பேரையும் தனது தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தச் செய்தியை ஒற்றர்கள் மூலம் சகரன் அறிந்து கொண்டு, ஆறாத துயரம் அடைந்தான். தன்னுடைய பேரனான அம்சுமானை அழைத்து "மைந்தர்களை இழந்த நான் யாகத்தையும் இழக்கக் கூடாது" என்று கூற. அம்சுமான் பாதாள லோகம் சென்று, கபிலரின் பாதத்தில் விழுந்து வணங்கி நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினான். அம்சுமானின் பணிவான வார்த்தைகளைக் கேட்டக் கபிலருக்கு அவன் மீது இறக்கம் ஏற்படவே, குதிரையை அவிழ்த்துக் கொண்டு போகுமாறு அவனுக்கு மறு உத்தரவு அளித்தார். அம்சுமானும், கபிலரை மீண்டும் வணங்கி விட்டு அக்குதிரையை மீட்டு ஆயோத்தியா கொண்டு சென்றான்.

சகரனும் அவ் வேள்விக் குதிரை கிடைத்த சந்தோஷத்தில் வெற்றிகரமாக அந்த அசுவமேக யாகத்தை முடித்தான். ஆனால், அவனது அறுபதினாயிரம் புத்திரர்களின் ஆத்மாவும் முக்தி கிடைக்காமல் நரகத்தில் அலைந்து வருவதை அம்சுமானுக்குத் தெரிவித்தான் சகரன். அம்சுமானும், அதனை உணர்ந்தான். அம்சுமானுக்கு திலீபன் என்ற மகன் பிறந்தான், திலீபன் தனது முன்னோர்களான அறுபதினாயிரம் பேரையும் நரகத்தில் இருந்து மீட்டு எடுக்க முயற்சி செய்தும், அவன் தனது முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவனது ஆயுட் காலம் முடிந்தது தான் மிச்சம். தீலிபனுக்குப் பகிரதன் என்ற மகன் பிறந்தான், பகீரதனுக்குத் தனது தந்தையின் ஆசைப்படி தனது முன்னோர்களை சுவர்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வரவே. சிரஞ்சீவியும், தனது குலகுருவுமான வசிஷ்டரிடம் அதற்கான வழியைக் கேட்டான். அதனைக் கேட்ட வஷிஸ்டர் பகீரதனிடம் "அது சாதாரண வேலை இல்லை மகனே, அதற்கு பிரம்மனின் கருணை வேண்டும். நீ அதற்குக் கடுமையான தவத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும்" என்று பகீரதனிடம் பதில் உரைத்தார்.

வசிஷ்டரின் மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாறாயிரம் ஆண்டுகள் பகீரதன் தவம் செய்ய, பிரம்மன் தோன்றினார். அப்படித் தோன்றிய பிரம்மன் பகீரதனை நோக்கி, "பகீரதனே! உனது சிறந்த தவத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். கபிலமுனிவரின் கோபத்தினால் அழிந்தவர்கள் உன்னுடைய முன்னோர்கள், ஆகையால் ஆகாய கங்கையின் நீரிலே, அவர்களுடைய எலும்பு படியுமானால் அவர்கள் நற்கதி அடைவார்கள். அதே சமயத்தில் ஆகாய கங்கை நேரடியாக இந்த பூமியில் விழுந்தால், அதன் வேகத்தை பூமியினால் தாங்க முடியாது. அத்துடன் மட்டும் அல்ல. அதனைத் தாங்கும் வலிமை சிவ பெருமான் ஒருவருக்கே உண்டு. ஆகையால், கங்கையைத் தாங்கும் படி வேண்டி முதலில் சிவ பெருமானிடம் வரம் பெறுவாயாக!” என்றார்.

பிரம்மன் கட்டளைப் படி பகீரதன் சிவ பெருமானை நோக்கிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். சிவபெருமான் பகீரதனின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவன் கேட்கும் வரத்தைத் தர அவன் முன் தோன்றினார். அப்போது பகீரதன் பிரம்மன் சொன்னபடி, சிவ பெருமானிடம், கங்கை பூமிக்கு வரும் போது அதனைத் தாங்க வேண்டும் என்று வரம் கேட்க. சிவ பெருமானும், அந்த வரத்தை பகீரதனுக்கு அளித்தார்.

பின்பு, பகீரதன் கங்காதேவியைப் பூமியில் வரும் படி வேண்டுவதற்காக, அவளை நோக்கி ஐயாயிரம் வருடம் தவம் செய்தான். அதனைக் கண்டு மகிழ்ந்த கங்கா தேவி, பகீரதன் முன் தோன்றினாள். பகீரதன் தனது வேண்டுதலை கங்கா தேவியிடம் சொல்ல, அதற்குக் கங்கை "நான் இந்த பூமியில் நதியாக வருவதைப் பற்றி ஒன்றும் எனக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால், சிவபெருமான் உன்னுடைய விருப்பத்தை நிறை வேற்றுவதற்காகச் சொன்ன வார்த்தைகள் வெறும் விளையாட்டாகச் சொன்னவை. ஆதலால், மீண்டும் அவர் கருத்தை நீ நன்றாக அறிய, சிவனை நோக்கி மேலும் சிறந்த தவத்தைச் செய்வாயாக!" என்று கூறி விட்டு மறைந்தாள்.

கங்கை கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு பகீரதன் முதலில் துன்பம் அடைந்தாலும். தனது முன்னோர்களின் முக்தியின் பொருட்டு, மீண்டும் சிவ பெருமானை நோக்கி இரண்டாயிரத்து ஐநூறு வருடம் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாய் சிவ பெருமான் அவன் முன் தோன்றி, "பகீரதா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு பகீரதன் சிவனை நோக்கி, "எம்பெருமானே! கங்கா தேவி தாங்கள் கூறிய சொற்கள் வெறும் விளையாட்டாகக் கூறியவை என்று சொன்னார்கள். ஆகவே, தங்களை நோக்கித் தவம் செய்தேன். என்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைய, தாங்கள் தான் கருணை செய்ய வேண்டும்!" என்று வேண்டினான்.

இதற்கு மறுமொழியாக சிவ பெருமான், "இதற்காகவா இத்தனை கடுமையான தவத்தைச் செய்தாய்? கங்கையின் சொல்லுக்காகக் கலங்காதே. எனது வார்த்தைகள் ஒன்றும் விளையாட்டு இல்லை. நான் உனக்கு மீண்டும் வாக்களிக்கிறேன், யாம் கங்கையின் நீர் சிறிதும் சிந்தாதபடி, அதனைத் தடுத்துப் பூமியைக் காத்து அருள்வோம்" எனக் கூறி விட்டு மறைந்தார் ஈசன்.

பகீரதன் மீண்டும் கங்கையை நோக்கி இரண்டாயிரத்து ஐநூறு வருடகாலம் தவம் செய்தான். பகீரதனுடைய தவம் முடிந்த உடனே கங்கை, பிரம்மனுடைய சத்தியலோகமும் இந்திரனுடைய சுவர்க்க லோகமும் நடுங்கப் பேராரவாரத்துடன் பூலோகத்தில் வந்து சேர்ந்தாள். அவ்வாறு, கங்கா தேவி பூமிக்கு வரும் சமயத்தில் ஈசன் கங்கை நதியின் அதீத பிரவாகத்தைத் தனது சடையில் தாங்கி, பூமி தாங்கும் அளவுக்கு மிகச் சிறியதொரு பாகத்தை வெளியிட்டார்.

பூமியில் இறங்கிய கங்கை பகீரதன் வழிகாட்ட, விரைந்து சென்றாள். அப்போது வழியில் இருந்த ஜஹ்நு முனிவரின் யாகத்தை தனது பிரவாகத்தால் அழித்தாள். கோபம் கொண்ட அந்த முனிவர் கங்கையை அப்படியே வற்றும் படி தனது தவ வலிமையால் பருகி விட்டார். பகீரதன், முனிவரின் இந்தச் செயலால் மிகவும் மனம் நொந்து, அவரிடம் தனது சூழ்நிலையை கண்களில் கண்ணீர் வர எடுத்துரைத்தான். அவன் மீது கருணை கொண்ட ஜஹ்நு முனிவர் கங்கை நதியை தனது காதின் வழியாக, வெளியிட்டார். மீண்டும் கங்கையின் பிரவாகம் தொடங்கியது. ஜஹ்நு முனிவர் மீண்டும் அவ்வாறு வெளியிட்டதால் "ஜாஹ்நவீ" என்ற பெயரையும். பகீரதன் மூலம் இந்த பூமிக்குக் கொண்டு வரப்பட்டதால் "பகீரதி" என்ற பெயரையும் கங்கை பெற்றாள்" என இவ்வாறு கங்கையின் கதையை விசுவாமித்திரர் ஸ்ரீ ராமனுக்குக் கூறி முடித்தார்.

ஸ்ரீ ராமர் இதனைக் கேட்டு வியப்புற்று கங்கையை வணங்கினார். இளவல் லக்ஷ்மணனும் கங்கையைத் தொழுது கொண்டான். பின்பு கங்கையைக் கடந்த அம்மூவரும் விசாலை நகரத்தை அடைந்தார்கள். அந்த நாட்டு அரசன் அம்மூவரும் வந்த செய்தி கேட்டு, அவர்களை வரவேற்று உபசரித்தான். பின்னர் மூவரும், அந்த அரசனிடம் இருந்து விடைபெற்று விதேக நாட்டை அடைந்தார்கள். அந்த விதேக நாட்டைக் கடந்து தான் மிதிலை செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தாலே மிதிலையின் மதில்களைக் காணலாம். ஸ்ரீ ராமர் அந்த இடத்தை சுற்றிப் பார்த்த போது ராமரின் பூ போன்ற பாதங்கள், அவரை அறியாமல் ஒரு கல்லின் மீது இடரவே. அந்தக் கல் ஒரு அழகிய பெண்ணின் ரூபத்தை எடுத்து ஸ்ரீ ராமரைக் கை கூப்பி வணங்கியது.

"இது என்ன ஆச்சர்யம், ஒரு கல் அழகிய பெண் ஆனதே! ஒரு வேளை இது கூட அரக்கர்களின் மாயையோ" என்று ஸ்ரீ ராமர் நினைக்க. அதனைக் குறிப்பால் அறிந்த விசுவாமித்திரர் இராமபிரானை நோக்கி, "பகீரத சக்கரவர்த்தியின் வம்சத்திற் பிறந்த குமாரனே! இப்போது சிலை வடிவம் நீங்கிப் பெண் வடிவு பெற்று, மகிழ்வோடு நாணத்தினால் இங்கு ஒதுங்கி நிற்பவள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகை. தேவேந்திரன் தீவினையை விரும்பிச் செய்ய, அதனால் கௌதம முனிவர் அவனுக்கு ஆயிரம் கண் ஏற்படச் சாபம் அளித்தார்" என்று கூறினார்.

அதைக் கேட்டு வியப்புற்ற ஸ்ரீ ராமர், விசுவாமித்திரரிடம் "முனிவர் பெருமானே! இவளோ உலகத்தாய் போன்று குற்றமற்றவலாகத் தோன்றுகிறாள். இப்படிப் பட்டவளுக்கும் கல்லாக மாறும் நிலை நேரிட்டதென்றால், இந்த உலகின் நடப்பை என்னவென்று சொல்வது? இப்படி இவள் உருவம் மாறுபட்டதற்க்குக் காரணம், முற்பிறவியின் ஊழ்வினையா? அல்லது இப்பிறப்பில் ஏதேனும் நேர்ந்தது உண்டா? இதனை விளக்கிக் கூற வேண்டுகிறேன்" என்று, கேட்டுக் கொண்டார்.

விசுவாமித்திரர் அக்கணமே இராமச்சந்திர மூர்த்தியின் விருப்பத்திற்கு இணங்கி, அகலிகை சாபம் பெற்ற அந்தக் கதையைக் கூறத் தொடங்கினார்.

"ராமா, முன்பு ஒரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மதேவன், முன்பு தன்னால் படைக்கப்பட்ட மக்களின் அங்கங்களில் உள்ள சிறப்பை எல்லாம் எடுத்து அழகு மிகுந்த பெண் ஒருத்தியைப் படைத்தார். அவளுக்கு அகல்யா என்று பெயரிட்டார். இந்திரன் அந்தப் பெண் அழகியைக் கண்டு மோகித்தான். பிரம்மனிடம் சென்று தேவேந்திரன் என்ற செருக்குடன் அகலிகையை தனக்குக் கொடுக்குமாறு கேட்டான். அவனுடைய செருக்கை உணர்ந்த பிரம்மதேவன், அகலிகையை இந்திரனுக்குக் கொடுக்காமல் கௌதம முனிவரிடத்தில் ஒப்படைத்து "இவளைப் பாதுகாத்து வருவீராக!" என்று கட்டளையிட்டார். வெகுகாலம் அம் முனிவர் அவளைப் பாதுகாத்த பின், மீண்டும் பிரம்மனிடமே அவளைக் கொண்டு போய் சேர்த்தார். இத்தனைக் காலாமும், இவ்வளவு அழகான பெண்ணை ஒழுக்கத்துடனும், சபலம் கொள்ளாமலும் அம்முனிவர் பாதுகாத்து வந்ததன் காரணமாக பிரம்மதேவன் மகிழ்ந்து அகலிகையை அவருக்கே மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் பொறாமையும் கோபமும் கொண்டான் இந்திரன்.

ஒரு நாள் கௌதம முனிவரின் தவக் கூடத்தின் அருகே ஒரு சேவல் வடிவங் கொண்டு, நடு இரவில் கூவினான். முனிவர் பொழுது விடிந்து விட்டதாக எண்ணி நீராடச் சென்றார். உடனே, இந்திரன், இது தான் சமயம் என்று கௌதம முனிவரின் வேடம் கொண்டு, அகலிகையிடம் சென்று அவளுடன் கூடி இன்பம் அடைந்தான். ஒரு கட்டத்தில் வந்திருப்பவன் தனது கணவன் அல்ல என்பதை ஸ்பரிசத்தால் (தொடு உணர்ச்சியால்) அகலிகை அறிந்து கொண்டாலும், இந்திரனின் அந்த அரவணைப்பை அகலிகை விரும்பினாள். "இது தனது கற்புக்குத் தகுதி இல்லை" என்பதையும் மறந்தாள்.

நீராடச் சென்ற கௌதமமுனிவர், தாம் எழுந்து புறப்பட்டு வந்தது நடுநிசி என்பதை அறிந்தார். அவ்வாறு தான் ஏமாந்தது இந்திரனின் வஞ்சனையால் என்பதைத் தம் ஞானக் கண்ணால் அறிந்தார். அதனால் எழுந்த பெருங் கோபத்துடன் முனிவர் தமது தவக் கூடத்துக்கு வந்தார்.

கௌதம முனிவரைக் கண்டதும், கூடிக் குலாவிக் கொண்டிருந்த தேவேந்திரனும், அகலிகையும், வெட்கித் தலை குனிந்தார்கள். இந்திரன் வஞ்சிப்பதில் வல்ல பூனையின் வடிவத்தைப் பெற்று அங்கிருந்து மெதுவாகச் செல்லத் தொடங்கினான். உடனே கௌதம முனிவர் தனது தீப்பொறி பறக்கும் பார்வையால் இந்திரனை நோக்கி, "இந்திரனே! ஒரு பெண்ணின் குறியில் ஆசைப்பட்டு இன்று நீ பெரும் பாவத்தைப் புரிந்து விட்டாய். பிறன் மனைவியைப் பெண்டாள நினைத்த உனக்கு, இதோ நான் கொடுக்கும் சாபத்தைப் பெற்றுக் கொள்! உனக்கு இனி ஒரு போதும் காம இச்சை ஏற்படாமல் இருப்பதற்காக உன் மேனியெங்கும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும்!" என்று சபித்தார்.

இந்திரன் தனது உடம்பு முழுவதும் முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட குறிகளைக் கண்டு வெட்கம் அடைந்தான். ஆயினும் வேறு வழியில்லாமல் அந்த உடம்புடன் தனது உலகத்துக்குச் சென்றான். இந்திரன் போன பின்பு, தன் மனையாளைப் பார்த்து, "அகல்யா! பெண்களுக்கு அணிகலனே கற்பு தான். அதனை விட்டு விட்டு வேசியைப் போல ஒழுக்கம் தவறிய நீ கல்லாகக் கடவாய்!" என்று சாபமிட்டார். உடனே அகலிகை அந்த இடத்திலேயே கருங்கல் வடிவமாய் விழுந்தாள்.

கருங்கல்லாக மாறும் முன் அவள்; தன் கணவரை நோக்கி "மணாளரே! நான் அறியாமல் செய்த இந்தக் குற்றத்தைப் பொறுத்தருளக் கூடாதா? நான் பெற்ற இந்த சாபத்துக்கு விமோசனம் தான் என்ன?" என்று வேண்டினாள். அகலிகையின் வேண்டுகோளுக்கு இணங்கிய கௌதமுனிவர், "பெண்ணே! தசரத குமாரனாகிய ஸ்ரீ ராமருடைய திருவடி உன் மீது படும் போது, நீ மீண்டும் உனது கல் வடிவம் நீங்கி சுய ரூபம் பெறுவாய்" என்று சாப விமோசனம் அளித்தார்.

மறுபுறம், தன் உலகத்துக்குச் சென்ற இந்திரனைப் பார்த்த தேவர்கள், பிரம்ம தேவனையும் இந்திரனையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு கௌதம முனிவரிடத்தில் வந்தார்கள். அவரிடம் இந்திரனின் தவறை பொறுத்தருளும் படி வேண்டி நின்றார்கள். தன் கோபம் தீர்ந்த முனிவர். இந்திரனின் உடம்பு முழுவதும் இருந்த ஆயிரம் பெண் குறிகளையும், ஆயிரம் கண்களாக மாற்றி அருள் புரிந்தார். பின்பு, தேவர்களும் தங்கள், தங்கள் உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்" என்று அகலிகையின் கதையை விசுவாமித்திரர் இராமனிடத்தில் கூறி முடித்தார்.

பின்னர் இராமபிரான் அகல்யா தேவியிடம் "தாயே! இது வரை ஏற்பட்ட துன்பத்திற்கு தாங்கள் வருத்தப்படாதீர்கள். நடந்தது, நடந்ததாகவே இருக்கட்டும். இனி வரப் போகும் நாட்களில் தாங்கள் கௌதம முனிவரிடத்தில் மீண்டும் சென்று அவருக்குப் பணி விடை செய்து எஞ்சிய நாட்களை இனிதே கடத்துங்கள்" என்று கூறி முடித்தார். அந்நேரம், இமயமலைச் சாரலில் தவம் செய்து வந்த கௌதம முனிவர் தனது ஞானக் கண்ணால் மனைவின் சாப விமோசனத்தை அறிந்து அவ்விடம் வந்து சேர்ந்தார். அப்போது கௌதமரைக் கண்ட விசுவாமித்திரரும், ஸ்ரீ ராமரும் அவரைப் பணிந்து கொண்டு அவரிடம் அகலிகையை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடினார்கள். அவர்கள் விருப்பப்படியே கௌதம முனிவர் அகலிகையின் குற்றத்தை மன்னித்து மீண்டும் அவளை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

அகலிகையை, இவ்வாறு கௌதமரிடம் ஒப்படைத்த விசுவாமித்திரர் மற்றும் இராமலக்ஷ்மணர்கள் மேலும் தங்களது பயணத்தை தொடர்ந்தார்கள். அதன் பயனாய் மிதிலை நகரின் மதிலை வந்து அடைந்தார்கள்.


மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல்
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். 
 
நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான்.
 
மூவரும் இரவு சோலையில் தங்குதல்
கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார். 
 
மூவரும் கங்கை நதியைக் காணுதல்
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 
 
அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். 
 
மூவரும் மிதிலை சேர்தல்
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 
 
மிதிலை நாட்டு வளம்
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 
 
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 
 
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை.
 
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 
 
இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 
 
படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள்.
 
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்
இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். 
 
கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 
 
அகலிகையை வரலாறு
மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும் என்றான். 
 
பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக! என்றான். 
 
அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்;
 
தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.
 
புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
தக்கது அன்று என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். 
 
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். 
 
தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின் முன்னம்.
 
எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். 
 
"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான். 
 
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
 
அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்
தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை! என்ன பொன் அடி வணங்கி போனாள்.
 
அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல்
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 
 
அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான்.
 
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 
 
இனைய சோலை மற்று யாது? என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண் என வலித்தான். 
 
அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. 
 
அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 
 
"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால், 
 
"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான். 
 
பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க, 
 
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க, 
 
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே, இரு புடையினும், சாமரை புரள,
கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க, 
 
தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான். 
 
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை
வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு.
 
"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று, அழியா,
விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும்.
 
புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
"மிகை எழுந்திடு சதமக! கேள்" என வெகுண்டான். 
 
"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல்
வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால். 
 
"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன், கொதித்தே. 
 
அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்.
 
அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
"நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க
முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான். 
 
வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். 
 
வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
"தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்" எனச் செப்ப,
"அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன். 
 
"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்; 
 
"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து
போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து,
"நாமம் இன்று" எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது.
ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர். 
 
மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான். 
 
திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான். 
 
இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார். 
 
வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி, 
 
அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு" என்றாள். 
 
என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ,
சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி" என்று
அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள்.
 
கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
நாட்டம் நீர் தர, "மருந்து" எனும் நாமமும் நவின்றான்.
 
ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான். 
 
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக என்று இராகவன் வினவுற, எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். 
 
விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 
 
திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். 
 
வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. 
 
கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. 
 
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். 
 
மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். 
 
உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். 
 
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான். 
 
பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. 
 
சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். 
 
உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: 
 
"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்: 
 
"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், 
 
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: 
 
"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான். 
 
"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். 
 
மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
பாலகாண்டம் - அகலிகைப் படலம் (தொடர்ச்சி)
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
 
ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள். 
 
கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 
 
எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். 
 
பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான்.
 
உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. 
 
புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். 
 
இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, 
 
உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே.
 
நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான். 
 
அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த! 
 
சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம். 
 
என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா, 
 
மது மலைந்த் வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம். 
 
அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 
 
வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி என்ன,
பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான்.