காக்காய் பொன்

காக்காய் பொன்

bookmark

காட்டில் செழியன் நடந்து கொண்டிருந்தான். கனத்த, தடியான ‘ட்ரேக் ஷூ’ காலைக் கடிக்காவிட்டாலும், வேகமாக நடக்கும் போது மட்டும், கொஞ்சம் வலிக்கத் தான் செய்தது. உடன் வந்த நண்பர் ரோபர்ட் சுவாவின் முகத்தில் சுரத்தே இல்லை. சிங்கப்பூரிலிருந்து வரும்போதிருந்த உற்சாகம், துள்ளல் எல்லாமே சென்னையில் வந்திறங்கிய சில மணி நேரங்களி லேயே காணாமல் போயிருந்தது!

சென்னையின் நெரிசலும், டேக்சிக் காரர்களின் பேரமும், ஆட்டோக்காரர்களின் கோபமும், நடுத்தெருவில் நின்று அசிங்கம் செய்யும் சிலரின் அவலமும்……. அந்த சூழலே ரோபர்ட்டை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் செழியனோ எதையும் கண்டுகொள்ளவுமில்லை; கவலைப்படவும் இல்லை! சிங்கப்பூரிலிருந்து வந்த குறிக்கோளை உருப்படியாக நிறைவேற்றி திரும்ப வேணுமே என்பது மட்டுமே அவனது பெருங்கவலையாக இருந்தது! ரோபர்ட் சுவா சீனர்தான் என்றாலும், அலுவலகத்தில் மற்ற சீன, மலாய் நண்பர்களிடம் கூட இல்லாத நெருக்கம் செழியனிடம் இருந்தது. அதனால் தான் இந்த ‘கம்ப சித்ர சாகஸத்துக்கு உடன் வரவே ஒத்துக் கொண்டார்.

ஆனால், சென்னையில் வந்திறங்கிய இரவே தும்மலும், சளியும் பிடித்துக் கொண்டது. நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு, காரில் பல மணிநேரம் பயணம் செய்து, இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது, காலை சூரியன் கண்களை எரிக்கத் தொடங்கியிருந்தான். வெயில் பட்டவுடன், சளியும் தும்மலும் போன இடம் தெரியவில்லை ! காட்டுக்குள் போகும் முகப்பிலேயே, கூரை வேய்ந்த கடை மாதிரி, ஒரு தடுப்புக்குள் பெரியவர் ஒருவர் குனிந்து உட்கார்ந்திருந்தார். அங்கு கிடைத்த ‘கஞ்சி மாதிரி’ ஒன்றைப் பார்த்ததுமே சுவா தனக்கு வேண்டாமென்றிட்டார். செழியன் பேருக்கு குடிப்பதுபோல் பாவ்லா செய்தான்.

உழுத முகமும், காரைப்பற்களுமாய், பெரியவர் அவர்களை உறுத்துப் பார்த்தார்.

“காட்டுக்குள்ளார போறீங்களா?”

“ஆமாம், தாத்தா?”

விறு விறுவென்று உள்ளே போன பெரியவர், வெளியே வந்தபோது, அவர் கையில் என்னமோ இருந்தது. என்ன…. ஏது என்று. நிதானிக்கும் முன்னர், “இந்தாங்க, போட்டுக்குங்க” என்று பானை வடிவில் கோத்த தாயத்து இரண்டை சடாரென்று இருவர் கழுத்திலும் மாட்டி விட்டார். “பாத்து பதனமாப் போயிட்டு வாங்க” என்று பிளேடு கீறிய குரலில் பெரியவர் சொல்ல, “இந்தாங்க —தாத்தா!” என்று, ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினான் செழியன். ஒரு கணம் அவர்களை முறைத்துப்பார்த்த தாத்தா “முதல்லே பத்திரமா திரும்பி வாங்க ! அது போதும்” என்றவர், திரும்பியும் பார்க்காமல் உள்ளே போய்விட்டார். அதையே, பெரிய ஆசீர்வாதமாய் எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.

சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகையின் முக்கிய நிருபர்கள், செழியனும் ரோபர்ட் சுவாவும். ‘கூகில்’ தேடலில் ஒருமுறை, இந்த முட்டுச்சந்து மலையைப் பற்றி படித்த போதே, செழியன் முடிவெடுத்து விட்டான். பரபரப்பான தகவல்களோடு செழியன் விளக்க விளக்க, ரோபர்ட்டுக்கு ஆர்வம் தாங்கவில்லை. சுவாரஸ்ய மான கட்டுரை மட்டுமல்ல, முடிந்தால் ஒரு ஆவணத்துக்கான குறிப்புக்களோடு வருகிறோம் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டுப் புறப்படும் போது, ரோபர்ட்டுக்கு காட்டுக்குள் போகும் ‘த்ரில்’லைவிட, தமிழ் நாட்டுக்குப் போகும் ஆவல் தான் முந்தி இருந்தது. தோசை, இட்டலி, இடியாப்பம், கோழிக்கறி என தமிழ்நாட்டு உணவு வகைகள் என்றாலே கொள்ளைப் பிரியம் சுவாவிற்கு. பிறகு தமிழ் நாட்டுக்குப் போகத் தயக்கமா வரும்?

‘ட்ரேக் ஷூ’, உடம்பெல்லாம் பூச்சி கடிக்காதிருக்க மன்னாளித் தைலம், முகத்துக்கு ‘க்ரீம்’, தோள் பையில் மடக்குக் கத்தி, வேறு சில உபகரணங்கள், மருந்துப் பொட்டலங்கள், பிஸ்கட், உலர்பழங்கள், தேவைக்கேற்ப பசியாற்ற அத்தியாவசிய ‘ரெடிமேட்’ உணவுவகைகள், ‘மினரல் வாட்டர் பாட்டில்’கள், தோளில் கேமிரா, தூரப் பார்வைக்கு கைப்பிடியில் அடங்கும் நவீனரக ‘டெலஸ் கோப்’ என இருவருமே எல்லா முஸ்தீபுகளோடும்தான் நடந்து கொண்டிருந்தனர். அடி பெருத்த மரங்கள், சிறுத்து நீண்டு வளர்ந்த மரங்கள், கனத்து பெருத்து இலை, தழை என கொப்பும் கிளையுமாய் பிள்ளை குட்டி சகிதம் நிரம்பி வழிந்த மரங்கள், ‘உய்ஷ்ஷெ ‘ன்று நூதனமாய் அடிவயிறு கலங்கும் விதமாய் ஊளையிட்டபடியே காற்றில் சிலிர்த்தாடிய மரங்கள் என ஒவ்வொரு காட்சியாய் அவர்கள் கடந்து கொண்டிருந்தார்கள்.

‘க்ரீச்’சிட்டு சிறகடிக்கும் பட்சிகள், உர்ரென்று முறைத்துக் கொண்டு பார்க்கும் குரங்குகள், வழியெல்லாம் அப்பிக்கிடந்த அட்டைகள், நெருப்பாய் கனன்று நின்ற காட்டுக் கோழிகள் என ரோபர்ட்டின் காமிரா எல்லாவற் றையும் படம் பிடித்துக் கொண்டு வந்தது. இரண்டு மணி நேரமாக நடந்தும், செழியன் தேடி வந்த முட்டுச்சந்து மலையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வெளியே வெயில் அப்படி எரித்தும், காட்டுக்குள் ‘கும்’மென்று இருளோடித் தான் கிடந்தது. முண்டும் முடிச்சுமாய் குட்டி குட்டி பாறைகளின் உடைந்த கல்கட்டிகள், எவ்வளவோ கவனமாய் நடந்தும் முட்டியைப் பதம் பார்க்கத் தவறவில்லை . திடீரென்று சலசலத்து ஓடும் சின்ன ஆறு குறுக்கிட்டது. பளிங்குபோல் தண்ணீரைக் கண்டதும் உடனே முகம் கழுவி ஒரு வாய் தண்ணீர் குடிக்கணும்போல் தோன்றவே, செழியன் ஆற்றை நெருங்கியதுதான் தாமதம்,“வேண்டாம், போகாதே” என்று ரோபர்ட் செழியனைப் பின்னாலிருந்து ஓடி வந்து தடுத்து நிறுத்தினான். “செழியன்! ஆற்று நீரை நன்றாகப் பார்”. உண்மைதான்! உற்றுக்கவனிக்க, வர்ணஜாலங்களில் நீர் பிரிந்து பிரிந்து ஓடிக் கொண்டிருந்தது.

வெலவெலத்துப்போனான் செழியன்.

இது விஷ நீர்! இந்த நீரை மட்டும் குடித்திருந்தால்…. பாதாதிகேசமும் நடுங்கிப்போய் சடாரென்று அருகே இருந்த பாறையில் உட்கார்ந்து கொண்ட செழியனுக்கு பசி, தாகம் எல்லாமே மறந்து போனது. ஆனால், ரோபர்ட், சிங்கப்பூரி லிருந்து கொண்டு வந்திருந்த, மினரல் வாட்டரைக் குடித்தான். பிஸ்கட்டைத் தின்று ஒரு ஆப்பிளையும் சாப்பிட்டு முடித்தபோது, செழியன் முட்டுச்சந்து மலையில் உள்ள குங்கிலியப் பாறையைப் பற்றி விளக்கி முடித்தான்.

“அப்படியானால் இந்த பயணத்தில் உன்னுடைய சுயநலமும் இருக்கிறதென்று சொல்!”

செழியனுக்கு சிரிப்பு வந்து விட்டது. இதற்கே இவன் மலைத்துப்போகிறானே! இன்னும் உள்ள உண்மையைத் தெரிந்து கொண்டால்……..

முட்டுசந்து காட்டுக்குள் உள்ள குங்கிலிய பாறையில் தான் தேடிவந்த விஷயத்தை அவன் இதுகாறும் யாரிடமும் சொல்லவில்லை. குங்கிலிய பாறையின் அடிவாரத்தில் தான், பூந்தேள் வடிவில், புஷ்பராகக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த கூம்பிய பாறைக்கற்களைப் பார்த்துப் பார்த்து தான் தெரிவு செய்து வெட்டி எடுக்கணும். இல்லையென்றால் முதல் கூட மிஞ்சாது. அவ்வளவு கூர்மையான, ஆபத்தான கற்கள்! இந்தியாவிலிருந்து வந்த நாச்சிமுத்துப் பெரியவர் தான் இந்த அரிய சிதம்பரரகசியத்தைச் சொன்னவர்.

நாச்சிமுத்து ‘பாரெஸ்ட் ஆபிசராக’ பணிபுரிந்தவர். அதனாலேயே முட்டுச்சந்து மலையின் மரம், செடி, கொடி, இலை, தழை, ஓடை, ஆறு, பாறை, குன்று என ஒவ்வொரு தகவலும் விரல் நுனியின் துல்லியமாக விளக்கினார்.

“பிறகு ஏன் நீங்க அந்த கற்களை எடுக்க முயற்சிக்க வில்லை ?”

“நான் புள்ளைகுட்டிகாரன் தம்பி. எனக்கு இன்னும் கொஞ்சகாலம் கூட உயிர் வாழணும்னு ஆசையிருக்கு தம்பி.”

“அவ்வளவு ஆபத்தா அய்யா ! அப்படீனா அதை எப்படி வெட்டி எடுக்கறது?”

– “இளவட்ட சாமர்த்தியக்காரங்களுக்கு அதை இனம் கண்டுபிடிச்சு வெட்டி எடுக்கறது ஒரு பொருட்டே இல்லை. ஆனா, எனக்கு அதுக்கெல்லாம் துணிச்சல் இல்ல தம்பி. கரணம் தப்பினா மரணங்கற விபரீத விளையாட்டு இந்த வயசிலே எனக்கு தேவைதானா? சம்பாதிக்கறது உடம்பிலே ஒட்டினாலே போதுமே” என்று நாச்சிமுத்து சொல்லி விட்டுப் போனாலும், செழியனால் இதை அசட்டையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஓடும் பாம்பைக்கூட. பிடிக்கும் துணிச்சல் இருக்கும்போது இது ஒரு விஷயமா? ‘அலுவலத்தில் ‘த்ரில்’லான ஒரு பயணக்கட்டுரை எழுதுகிறேன்’ என்று சொல்லி அனுமதி வாங்கியது பெரிய விஷயமல்ல. ஆனால் இதற்குப் பின்னால், செழியனுக்கு கடுமையான பணத்தேவை இருந்தது.

அண்மையில்தான் தன்னுடைய மூவறை வீட்டை விற்றுவிட்டு, பெரிய ‘கொண்டோமினியம்’ வீட்டை வாங்கியிருந்தான். மனைவி வேறு பிரசவ விடுப்பிலிருந்தாள். புதிய வீட்டின் ‘ரெனொவேஷன்’ செலவுக்கும், வீட்டுக் கடனுக்குமாய், பணத்துக்கு ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த நேரம். இந்த சந்தர்ப்பத்தில் தான் நாச்சிமுத்து இப்படியொரு திரியைக் கொளுத்திப் போட்டு விட்டுப் போனார். ‘என்ன வந்தாலும் சரி’ என்று கிளம்பி விட்டான்.

ரோபர்ட்டுக்கு இவன் ஏதோ மலையைப் பார்க்கும் ஆசையில் தான் வந்திருக்கிறான் என்று தோன்றினாலும் கூட, எங்கோ நெருடியது. செழியனின் பாய்ச்சலும், அவன் கண்கள் அலைந்த அலைச்சலும் ரோபர்ட்டுக்குப் புரியவில்லை.

லேசாக தூறல் போடத் தொடங்கியது. அப்படியும் வியர்க்கவே செய்தது. பகல் இரண்டு மணியாகியும் வெக்கை வெக்கை தான்! மேப்பை எடுத்து வைத்துக் கொண்டு செழியன் கர்மசிரத்தையாய் ஆராயத் தொடங்கினான்.

“சரியான கோணத்தில்தான் நடந்து வந்திருக்கோம். அதோ! எதிரில் ஒரு கோட்டிப்பாறை தெரிகிறது. இதிலிருந்து வலதுபுறம்தான் நடக்கவேண்டும்.

உற்சாகத்தோடு இரண்டடி எடுத்து வைத்தவர்கள் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டார்கள்! கனத்த, அடிவயிறு கொழுத்த பாம்புகள் இரண்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சரசலீலையில் கிடந்தன. இது நல்ல சகுனமில்லையே என்று செழியனுக்குப்பட்டாலும், ரோபர்ட் செழியனை இழுத்துக் கொண்டு பாதையை விட்டு மேலேறி, குண்டும் குழியுமாக இருந்த பாறைத்துண்டங்கள் வழியாக நடந்த பத்தாவது நிமிடம் அந்த பிரம்மாண்டம் தெரிந்தது.

கன்னங்கரேலென்று பட்டுத்தெறித்த மின்னல் போல் அப்படி ஒரு பளபளப்பான கருமை. என்ன பொருத்த மான பெயர், குங்கிலிய பாறை! காட்டுச்செடிகளையும், காலில் அப்பிய அட்டைகளையும், ஊர்ந்து வந்த விஷ ஜந்துக்களையும், மிக மிக ஜாக்கிரதையாய் கடந்து வருவதே பகீரதப் பிரயத்தனமாயிருந்தது. தட்டி முட்டி மலைக்கு முன்னால் வந்து நின்றபோது, இனம் புரியாத பரவசத்தில் மேனி சிலிர்த்தது. கரும்பூதமென பாறை அசையாது நின்று அச்சுறுத்தியது. அக்கம் பக்கம் ஒரு அசைவும் இல்லை . பாறைக்குக் கீழே அக்னி போல் ஜ்வாலையாய் மின்னியது கற்கள். ஆனால் பாறைக்கு வலப்புறம் செந்தழலாய் குங்குமமும், சந்தனமும் தீற்றிய செங்குத்தான ஒரு சிறிய முக்கோணத் தூண் சரிந்து கீழே கிடந்தது. துணுக்கென்று பட்டாலும், அருகே சென்று தூணை நிமிர்த்தி வைத்தவன், அப்படியே திகைத்துப் போனான். அட! பிள்ளையார்! காட்டுப்பிள்ளையார்! அப்படியானால், இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கிறது. சுற்றுமுற்றும் பார்க்க, கண்ணில் ஏதும் தென்பட வில்லை. ‘அதனாலென்ன? சாமிதானே? நாமும் கும்பிட்டால் போச்சு!’

ஒரு நிமிடம் அப்படியே குனிந்து பிள்ளையாரைத் தொட்டுக் கும்பிட்டான். பிறகுதான் ரோபர்ட்டின் ஞாபகமே வந்தது.

“ரோபர்ட்! இதுதான் குங்கிலிய பாறை! நாம் கண்டு பிடித்துவிட்டோம்!” என்று பரவசத்தோடு சொல்லிக் கொண்டே திரும்பியது தான் தெரியும்.